ஓய்வூதிய தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிவந்தால் அவர்களுக்கு அவர்களின் பிஎப் கணக்கில் இருந்து பென்சன் வழங்கும் நடைமுறை உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) அமைப்பின் உறுப்பினர்களுக்கு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்சன் வழங்கப்படுகிறது. இப்போது குறைந்தபட்சம் 1000 ரூபாய் மட்டுமே பென்சன் கிடைத்து வருகிறது. இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர பென்சன் ரூ.1,000 என்பது மிகவும் குறைவு என்று நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

பொதுவாக அரசு ஊழியர்கள் மட்டுமில்லாமல் மாத சம்பளம் வாங்கும் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்காகவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் பணத்தைச் சேமிக்க அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக பிஎப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடுவதற்கு ஒரு வரம்பினைக் கொண்டுள்ளது. அதாவது ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 15 ஆயிரம் என்றால் அதற்கான பென்சன் தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இதேப்போன்று ரூ.20 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சம்பளம் வாங்கினாலும் அவர்களின் பென்சன் தொகையும் ரூ.15 ஆயிரத்திலிருந்து தான் கணக்கிடப்படுகிறது.
மேலும், பென்சன் தொகையை உயர்த்தும் முடிவை மத்திய தொழிலாளர் அமைச்சகம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் சுமார் 7 கோடி பிஎஃப் சந்தாதார்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலைக்குழு அறிக்கையில், “எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ரூ.1,000 மாதாந்திர பென்சன் என்பது இப்போது மிகவும் குறைவாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைப்படி, தொழிலாளர்களுக்கான அனைத்து ஓய்வூதியத் திட்டங்களையும் நிபுணர்கள் மூலம் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் மாதாந்திர உறுப்பினர் ஓய்வூதியத்தை சரியான அளவிற்கு அதிகரிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் பிஎஃப் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பிஎஃப் உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர். எனவே இது குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமும், அதிக வரவேற்பும் உள்ளது.
Be First to Comment