Press "Enter" to skip to content

ஈஷாவில் நடைபெற்ற சுதந்திர தினவிழா!

75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு 13ஆம் தேதியிலிருந்து பலரது வீடுகளிலும் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பலரும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி வருகின்றனர். இன்று சுதந்திர தின விழா இந்தியாவில் பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோகா மையத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

ஈஷா யோகா மைய நிறுவனர் வாசுதேவ், சிறப்பு அழைப்பாளர்களாக காமன்வெல்த் பொது செயலாளர் பெட்ரீசா மற்றும் முன்னாள் வெளியுறவு துறை செயலாளரும் ஜி20 அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஹர்த்வர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய கொடியை காமன் வெல்த் பொது செயலாளர் பெட்ரீசியா ஏற்றினார்.அதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளை பொதுமக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஈஷாவில் இருக்க கூடியவர்களும் கண்டுகளித்தனர். அதனை தொடர்ந்து ஹர்த்வர்தன், பெட்ரீசியா, ஈஷா நிறுவனர் வாசுதேவ் விழாவில் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வாசுதேவ், 75வது சுதந்திர தினவிழா மிகவும் மகத்தான நாள் எனவும், மக்களின் உறுதி தான் இதில் உள்ளதாகவும் தெரிவித்தார். மக்களின் உறுதியினாலும்,தெம்பினாலும் தான் நாடு முன்னேற்றத்துடன் செல்ல முடியும் என தெரிவித்தார். மேலும் தமிழ் என்றால் தெம்பு தான் எனவும் கூறினார். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நாடு ஒரு மகத்தான நாடாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். மண் காப்போம் இயக்கம் குறித்து பேசிய அவர், வெயில் காலங்களில் மண்ணை காப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து விவசாயிகளின் நலனுக்காக செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.

கயானா என்ற தேசத்தில் 100 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள நிலத்தை விவசாயிகள் மண் காப்போம் இயக்கத்திற்காக அளித்துள்ளதாகவும், இரண்டு வருடத்தில் அம்மண்ணிற்கு உயிரூட்டம் தருவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து நிலங்களிலும் கட்டிடங்கள் கட்டிவிட்டால் பாலைவனமாக மாறினாலும் யாரும் கேட்டமுடியாது என்பதால், நீதி முறையில் மண் வளத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பிரதமர் மூன்று நாட்களுக்கு தேசிய கொடி ஏற்ற கூறியது குறித்த கேள்விக்கு, தேசிய கொடி என்பது நாட்டிற்கு அறிகுறி என்றும், பாரத தேசம் என்பதே தனி உலகம் எனவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு தேசிய கொடியில் உள்ள மூவர்ணங்களும் நம் நெஞ்சில் துடிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்த நடைமுறை ஒரு முறை வந்து விட்டாலே தொடர்ந்து அனைவரும் இனிவரும் காலங்களில் பின்பற்றி கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். மண் காப்போம் இயக்கம் முடிந்து நம் நாட்டில் கால் வைத்தது மிகவும் மகத்தான நெகிழ்ச்சியான தருணமாக அமைந்ததாக தெரிவித்தார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks