அரசுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஊடகத்துறை மற்றும் பத்திரிக்கை துறையின் மீது அண்ணாமலை அவதூறு பரப்புகிறார் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உண்மைக்குப் புறம்பான அரைவேக்காட்டுத் தனமான பதில்களையே எப்போதும் அண்ணாமலை கூறி வருகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் 113.21 கோடி ரூபாய் மதிப்பிலான நகர் நல மைய கட்டிடங்கள் மற்றும் சாலை விரிவாக்கப்பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்;-
“கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக 1131 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 800 கோடி ரூபாய்க்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன” என அமைச்சர் தெரிவித்தார்.
“இரண்டு மூன்று மாதங்களில் மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளும் முடிந்து விடும் என தெரிவித்த அமைச்சர் அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் விரிவு படுத்தி உள்ளார்” எனவும் கூறினார்.

மற்ற மாவட்டங்களின் மாநகராட்சியை விட அனைத்து திட்டங்களையும் பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் தி.மு.க ஆட்சியில் இருக்கும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டின் தலைநகராக சென்னை இருப்பினும், தமிழ்நாட்டில் தொழில் துறையின் தலைநகராக கோவை இருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விமானநிலைய டெரிமினல் பகுதி டெண்டர் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நிலம் கையகப்படுத்தி ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கும் பணியை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து திருச்சி சாலையில் மேம்பாலப் பணிகள் முடிந்த நிலையில் திறக்கப்படாமல் உள்ளது என கேட்கப்பட்ட கேள்விக்கு சர்வீஸ் சாலையோரம் இருந்தவர்கள் தொடர்ந்த இந்த வழக்கு தொடர்பாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டு பணிகள் முடிந்து பாலங்கள் விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அந்தந்த வார்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் அடிப்படைத் தேவைகள் குறித்து மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மூலம் திட்ட வரைவு அறிக்கை தயார் செய்து அவற்றிற்கான பணிகளை முடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள 100 வார்டுக்களுக்கும் தேவையான திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் குறித்து உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை வைத்து வருவதாகவும், அரைவேக்காட்டுத் தனமான தொடர்ந்து கூறி வருகிறார் என விமர்சித்தார். நாங்களும் இருக்கிறோம் என்ற இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசிடம் கொண்டு வந்து சேர்க்கும் அரசிற்கு எடுத்துக்காட்டான பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் மீது அவதூறு பரப்புகிறார் எனவும் கூறினார்.
இந்த நிகழ்வுகளின்போது, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர்கள், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Be First to Comment