தமிழக அரசு ஒரு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் இந்த வேகம் பத்தாது என்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது :
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து தடுக்க, கோவை ஆட்சியரை சந்தித்து நடவடிக்கையை தீவிரப்படுத்த மனு அளித்துள்ளோம்
கோவையில் நேற்று 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மின் மயனங்களில் இடமில்லாத நிலை உள்ளது. ஆக்சிஜன் படுக்கை அமைக்க அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது இது தொடர்பாக மனு அளித்தோம்.

மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அதிக வாகனங்களை பயன்படுத்தி கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும். ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
கருப்பு பூஞ்சை நோய் பரவிக்கொண்டுள்ளது. மக்கள் பீதியடைந்துள்ளனர். கோவையில் 21 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உள்ளது.
ஒரு வீதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அதற்கு உரிய அதிகாரியை நியமித்து அவர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்க வலியுறுத்தியுள்ளோம்.
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சையை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த வேண்டும். இதற்காக தனி அலுவலரை நியமிக்க வேண்டும்.
தடுப்பூசியை கூடுதலாக வரவைக்க வேண்டும். கடந்த ஆட்சியில் சிறந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போல் இந்த அரசும் செய்ய வேண்டும் என்பது ஒரு அறிவுரையாக முன் வைக்கிறோம்.
சிங்கப்பூரில் இருந்து கருப்பு பூஞ்சைக்கு சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்வதாக கூறியுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த வேகம் பத்தாது. மக்களுக்கு உதவி செய்ய அனுமதி கேட்கிறோம். ஆனால் மறுக்கிறார்கள்.
அம்மா உணவகத்தில் 3 மாதம் இலவசமாக உணவு வழங்கினோம்.அதனை இந்த அரசு செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம். எங்களை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் ஆக்சிஜன் செரிவூட்டிகளை வாங்க எம்.எல்.ஏ நிதியை தருவதாக கூறினோம். இதுவரை பதில் இல்லை. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதி அப்போது தான் கொரோனா குறையும். கோவைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.ஆர்.ஜெயராம், அருண்குமார், அமுல் கந்தசாமி, தாமோதரன், கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோ கலந்து கொண்டனர்.
Be First to Comment