கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலை நிறுவப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றால் மனித வாழ்க்கை சீர்குலைந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டு கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது, “400 ஆண்டுக்கு முன்பு அம்மை நோய் காலரா ஏற்பட்ட போது மக்கள் பல உயிர்களை இழந்தனர்.தொடர்ந்து கிராமங்களிலே மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர்.

வேப்பிலை கும்பங்களும் நடுகற்களும் வைக்கப்பட்டு வழிபட்ட இடம் பிற்காலத்தில் கோவிலாக மாறியது இதற்காக எழுதப்பட்ட சாஸ்திரங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் மக்களாக ஏற்படுத்திய வழிபாடாகும். அதுபோல இன்று கொரோனோ கிருமி பாதிக்கப்பட்டவர்களை கண்டு பயப்படாமல் கொரோனா தேவி கருங்கல்லாலான சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த யாகத்திற்கு பக்தர்கள் யாரும் அனுமதி இல்லை.இன்று பழமை வாய்ந்த கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன் இருப்பது போல இந்த கொரோனா தேவி வழிபாடும் அவசியமாகிறது.அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மக்கள் நடந்து கொள்ளும்படியும் முக கவசம் தனிமனித இடைவெளி ஆரோக்கிய உணவு ஆகியன அவசியம்” என்று தெரிவித்தார்.
ஆதினத்தின் மூலம் செயல்படும் உலக சமாதான தெய்வீகப் பேரவை சார்பாக கிராமங்களுக்கு கபசுரக் குடிநீர்,முகக் கவசங்கள், மதிய உணவு ஆகியன தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
Be First to Comment