Press "Enter" to skip to content

கோவையில் உடல் நலக்குறைவால் நின்று கொண்டிருக்கும் யானை.

கோவை ஆனைகட்டியில் பகுதியில் உள்ள ஆற்றில் கடந்த எட்டு மணி நேரத்திற்கும் மேலாக உடல் நலக்குறைவால் நின்று கொண்டிருக்கும் ஆண் யானை.கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது, 70% வனப்பகுதி கொண்ட ஆணைகட்டியில் ஏராளமான யானைகள் உள்ளது.

யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில், எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில் ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது.

நேற்று மாலை முதல் இந்த யானை ஆற்றில் நின்று கொண்டு இருப்பதால் இதற்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் யோசனை செய்து வருகின்றனர் அதே சமயம் கேரளா வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத்துறையும், தமிழக வனப்பகுதிக்குள் வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நிற்பதால் யானை எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறது.

மேலும் உடனடியாக தமிழக வனத்துறையினர் இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். கேரள வனத்துறையினர் நேற்று முதல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். அவர்கள் யானைக்கு சிகிச்சை அளிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் யானையை காப்பாற்ற தமிழக வனத்துறையினர் முன் வர வேண்டும் என சூழலியல் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக காவல்துறையில் எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையில், வனத்துறையில் எல்லை பிரச்சனையால் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக, கேரளா வனத்துறையினர் யோசனை செய்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks