கோவை ஆவராம்பாளையம் சாலையில் உள்ள கோயமுத்தூர் தொழில்துறை கட்டமைப்பு சங்கத்தின் கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது ஆளுங்கட்சி அமைச்சர்களும், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். முன்வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், “எதிர்கட்சி, ஆளுங்கட்சி என்று இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு கொரோனா பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இப்பிரச்சனைக்கு தீர்வு காண எதிர்கட்சியினர் ஆலோசணைகள் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும் போது, “இரண்டாவது அலை தொற்று கடுமையாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை முக்கிய பிரச்சனையாக உள்ளது. தனியார் மருத்துவமனைகள் படுக்கைகளை குறைக்க கூடாது. அவ்வாறு செய்தால் நிலைமை மோசமாகும். படுக்கை, தடுப்பூசி, ரெம்டெசிவிர், ஆக்சிஜன், உடல்கள் எரியூட்டுதல் ஆகிய வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு தருவோம்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “கொரோனா இரண்டாவது அலை கொடூரமாக உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் கோவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேசன் அட்டைதாரர்களுக்கு வருகின்ற 15 ம் தேதி முதல் கொரோனா நிவாரணம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி உள்ளிட்ட வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Be First to Comment