பல ஆண்டுகள் தம்பதிகளாகச் சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் வரை பார்த்த மூத்தவர்களிடம் ஆசி வாங்கும் போது, தலைமுறையும் செழிக்கும் என்பது ஐதீகம்..இந்நிலையில் கோவையில்,இது போன்று 60 ஆம் வயது, 70,ஆம் வயது, 80 ஆம் வயது மற்றும் 90 ஆம் வயது என முப்பெரும் கல்யாண வைபவத்தை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் ரக்ஷா மகளிர் அமைப்பினர். அதன் படி பத்திரிக்கை அச்சடித்து,பிரம்மாண்ட அரங்கமான வாசவி மகால் திருமண மண்டபத்தில் ரக்ஷா மகளிர் அமைப்பு,அக்ஷயம் 2022 ஆகியோர் இணைந்து முப்பெரும் கல்யாண வைபவம் மற்றும் நவதி காலஸ்வரூப சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

ரக்ஷா மகளிர் அமைப்பின் தலைவி மகேஸ்வரி சுரேஷ்குமார்,செயலாளர் மேனகா சுரேஷ்பாபு,பொருளாளர் பத்மபிரியா வெங்கடேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,60 ஆம் வயதில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி,70 ல் நடைபெறும் பீமரதசாந்தி,80 ல் நடைபெறும் சதாபிஷேகம்,மற்றும் 90 வயதானவர்களுக்கு நவதி காலஸ்வரூப சாந்தி ஆகிய வைபவங்கள் நடைபெற்றது.விழாவில் முன்னதாக அதிகாலை கணபதி பூஜை,புண்யாஹவாஜனம்,சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு,பூர்ணாஹூதி,தீர்த்தாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர்,மாங்கல்யதாரணம்,பவளமணி தாரணம்,முத்துமணி தாரணம் மற்றும் நவதி காலஸ்வரூப சாந்தி விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து தம்பதிகளிடம் அனைவரும் ஆசிர்வாதம் பெற்றனர்..கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மூத்த தம்பதிகள் கலந்து கொண்ட முப்பெரும் கல்யாண வைபவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது…2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இதில் சிறப்பு விருந்துகளும் பரிமாறப்பட்டது.
Be First to Comment