கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் அ.தி.மு.க-வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் நேற்றோடு நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிடும் பிற கட்சி வேட்பாளர்களை மிரட்டியும், கடத்தியும் தி.மு.க-வினர் அராஜகப் போக்கில் ஈடுபடுவதாக அ.தி.மு.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், தேர்தல் விதிகளை மீறி கோவையில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ், கொலுசு மற்றும் ரொக்கம் ஆகிய பரிசுப் பொருட்களை தி.மு.க-வினர் வழங்கி வருவதாகவும், இதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் இருந்து ரவுடிகளையும், ஆட்களையும் கோவைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பரிசுப் பொருட்களை வழங்கும் திமுகவினர் குறித்து போலீஸில் புகார் அளிக்கும் அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்குப் போடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-வினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணி தலைமையில் அ.தி.மு.க-வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காவல்துறையே திமுகவின் ஏவல்துறையாக செயல்படாதே என்றும், தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டுமானால், துணை ராணுவத்தினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், பிரச்சாரம் முடிந்த பிறகும் கோவையில் தங்கியிருக்கும் கரூரில் இருந்து அழைத்து வரப்பட்ட வெளியூர்காரர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Be First to Comment