வெளி மாவட்ட போலீசார் உள்ளூர் போலீசார் என கோவை மாவட்டம் முழுவதும் நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும், காருக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது குறிப்பாக பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு நெருக்கமானவர்கள் இல்லம் என இந்து அமைப்பினர் வீடுகளுக்கு குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருவதால், கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 1700 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இது தவிர தமிழ்நாடு கமாண்டோ போலீசார் 50க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கோவை மாநகர போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் கோவை நகருக்குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர கூடுதலாக, நகரில் 28 இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.காவல் நிலையத்திற்கு மூன்று ரோந்து வாகனங்கள் வீதம் 15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பயணிகள் கொண்டு வரும் உடமைகள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உமா கோவையில், முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment