Press "Enter" to skip to content

நாடு முழுவதும் PFI நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட PFI அமைப்பினர்!

இதன் ஒரு பகுதியாக, கோவை கரும்புக்கடை பகுதியில் அந்த அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவரை NIA அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதே போல கர்நாடக மாநில PFI செயலாளர் சாதிக் முகமது தனது உதவியாளருடன் இன்று காலை கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்தில் வைத்து சாதிக் முகமதுவையும், அவரது உதவியாளரையும் பிடித்த NIA அதிகாரிகள் ரயில் நிலையம் முன்பாக உள்ள காவலர் அருங்காட்சியகத்தில் வைத்து, விசாரணை நடத்தினர். பின்னர் இஸ்மாயில் மற்றும் சாதிக் முகமது ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு நான்கு NIA அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லி சென்றனர்.

சாதிக் முகமதுவுடன் வந்த உதவியாளர் கோவை விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டார். டெல்லியில் வைத்து விசாரணைக்கு பின்னர் இருவரும் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதான தகவல்கள் கூறப்படும், என NIA தகவல் வட்டாரம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் PFI நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை நகரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.ஒப்பணக்கார வீதி, ஆத்துப்பாலம் , சாய்பாபா காலனி உட்பட பல்வேறு இடங்களில் PFI, SDBI அமைப்பினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட PFI அமைப்பினர் குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்டு, கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks