கோவை மதுக்கரை அருகே போக்குவரத்து பெண் ஆய்வாளரின் கணவரை இரும்பு கம்பியால் தாக்கி காரை கடத்திச் சென்ற 6 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் சிந்துநகரை சேர்ந்தவர் சஜின். இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வின்செண்ட்குமார் கட்டிட உள் அலங்கார நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு கேரளா மாநிலம் பாலக்காட்டில் சொந்தமாக வீடு உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சஜின் மற்றும் கணவர் வின்செண்ட்குமார் பாலக்காட்டில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இன்று காலை மீண்டும் பணிக்கு செல்ல சஜின் தனது காரில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அவரை இறக்கி விட்டு பின் வின்செண்ட்குமார் மீண்டும் பாலக்காடு நோக்கி சென்றுள்ளார். அப்போது கார் மதுக்கரை மரப்பாலம் அருகே வந்த போது பின்னால் இன்னோவா காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், வின்செண்ட் சென்ற காரை தடுத்து நிறுத்தி அவரை இரும்பு ராடால் தாக்கி உள்ளனர். இதையடுத்து அவரை கீழே தள்ளிவிட்டு அவரது காருடன் கோவை நோக்கி தப்பிச் சென்றனர்.
இதையடுத்து வின்செண்ட் சிகிச்சைக்காக மதுக்கரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கொள்ளையர் பிடிங்கி சென்ற வின்செண்ட் குமாரின் செல்போன் சிக்னல் மதுக்கரை அருகே காட்டுவதால், வீசி சென்ற செல்போனையும் தேடி வருகின்றனர். மேலும் கோவை செல்லக்கூடிய பகுதிகளில் உள்ள அனைத்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக ஹவாலா பணம் அல்லது வியாபாரத்திற்காக பணம் எடுத்துச்செல்வதாக வரும் தகவலை கொண்டு இம்மாதிரியான கொள்ளை சம்பவம் நிகழும், இதனால் வின்செண்ட் வந்த காரில் பணம் எடுத்து வரப்பட்டதா அல்லது தவறுதாக இந்த கார் கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment