எங்களுக்குத்தான் முடிவு எடுக்க அதிகாரம் இருக்கிறது பேரறிவாளன் விடுதலை வழக்கில் என்று மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. ஆனால் இதில் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு வைத்த வாதத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் . இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து, தனக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது இத்தனை நாட்கள் விசாரணை நடந்து வந்தது. நேற்று கடைசி நாள் விசாரணையில் பல்வேறு முக்கிய வாதங்கள் வைக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக இணை சொலிஸ்டர் ஜெனரல் நடராஜன் வழக்கில் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் விடுதலை செய்ய குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கவே அதிகாரம் உள்ளது. மாநில அரசோ, ஆளுநரோ அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. சட்டப்பிரிவு 432 படி குடியரசுத் தலைவருக்கு இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு வாதம் வைத்தது. இந்த சட்டம் மாநில அரசு மத்திய அரசுக்கும் பொருந்தும் என்றாலும், விசாரணை ஆணையம் எது என்பதை பொறுத்து மத்திய அரசு முடிவு எடுக்கலாம் என்று வாதம் வைத்தது.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால், கொலை வழக்கில் ஆளுநர் முடிவு எடுக்க அதிகாரமே இல்லை என்று கூறுகிறீர்களா? இத்தனை நாட்கள் ஆளுநர்கள் வழங்கிய மன்னிப்பு எல்லாம் விதி மீறல் ஆகிவிடும். 70-75 வருடங்களாக ஆளுநர் யாரை எல்லாம் விடுதலை செய்தாரோ அது எல்லாம் விதிமீறல் ஆகிவிடுமா? அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக மாறிவிடுமா? அப்படி என்றால் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமேதான் இருக்கிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து மத்திய அரசு வைத்த வாதத்தில், இந்த வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த வழக்கு. இதன் காரணமாக அதில் இது மாநில அரசின் வரம்பிற்கு கீழே வராது, மாநில அரசின் விசாரணை ஆணையம் விசாரித்த வழக்கு என்றால் மட்டுமே அதில் மாநில அரசு முடிவு எடுக்க முடியும் என்று மத்திய அரசு வாதம் வைத்தது.
இதில் மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. IPCயின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை வழங்கும் விவகாரத்தில், சட்டவிதிகளை மீறி அமைச்சரவையின் முடிவு இருந்தால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என மத்திய அரசு வாதம் வைத்தது. இதையடுத்து நீதிபதிகள்.. அப்படி என்றால்.. 161 CrPC. சட்ட பிரிவே வெற்றுக்காகிதம் என்று நீங்கள் சொல்கிறீர்களா என்று நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர். மத்திய அரசின் இந்த வாதத்தை தமிழ்நாடு அரசும் எதிர்த்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Be First to Comment