Press "Enter" to skip to content

மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து, இந்திய அளவில் கோவையை தூய்மை நகராக மாற்ற திட்டம் – டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!

மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து, இந்திய அளவில் கோவையை தூய்மை நகராக மாற்ற திட்டம் உள்ளதாக, டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.புதிய தமிழகம் கட்சி தலைவரும், தாமரை உலக பள்ளி தாளாளருமான டாக்டர் கிருஷ்ணசாமி, கோவையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரை அகில இந்திய அளவில் தூய்மையானதாக மாற்ற மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட உள்ளது. அரசியல் சாராமல் அனைத்து தரப்பு மக்கள் மூலம் இந்த இயக்கம் செயல்பட உள்ளது. சமீபத்தில் ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு துறை ஆய்வு நடத்தி வெளியிட்ட பட்டியல் படி சத்தீஸ்கர் மாநிலம் இந்தியாவிலேயே ‘தூய்மையான முதன்மை மாநிலம்’ என்ற பெயரை பெற்றுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரம் தொடர்ந்து 5-வது ஆண்டாக முதலிடமும், சூரத், நவி மும்பை, புனே போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் நகரமாக உள்ள கோவை மாநகரம் 42 வது இடத்தையும், சென்னை 44 வது இடத்தையும், மதுரை 45 வது இடத்தையுமே பெற்றுள்ளன. தூய்மை பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நகரங்கள் வடக்கு மாநில நகரங்களாக உள்ளன.

தமிழகத்தின் பெரு நகரங்கள் தூய்மை இல்லாததன் காரணமாக இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் வருகின்றன. எனவே தூய்மை நகரமாக மாற்ற, காற்று மாசுபடாமல் இருக்க வேண்டும். வீட்டு குப்பைகள் ஆங்காங்கே தேங்குவதை தவிர்க்க வேண்டும், கழிவு நீர் தேங்காமல் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இவைகள் தான் தூய்மைக்கான முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. எனவே கோவை பொலிவிழந்து 42 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு தூய்மையானதாக மாற்ற முயற்சி எடுக்க வேண்டும். கல்வி, தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு தூய்மையில் பின்தங்கி உள்ளது.
எனவே குப்பைகளை அகற்றுவது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. நகரங்களை தூய்மையானதாக வைத்தால் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும். கோவையில் உள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் அரசியல் சாராமல் இந்த மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுக்குள் கோவை மாநகரை இந்திய அளவில் தூய்மை நகரமாக மாற்ற வேண்டும். 3-வது ஆண்டில் முதல் இடத்தை பிடிக்கவும், தாமரை உலக பள்ளி மூலம் “தூசில்லா தமிழகம், மாசில்லா கோவை” என்ற குறிக்கோளை அடைய அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் மாபெரும் மாரத்தான் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks