கோவை ராஜவீதி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் சேவை மையம் சார்பில் மோடி முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில துணை தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். இந்த முகாமில் மத்திய அரசின் திட்டங்களை மக்கள் எளிதாக பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

செய்தியாளர்களிடத்தில் அண்ணாமலை கூறும்போது, “கடந்த 26-ம் தேதி 2 அமைப்புகள் நடத்திய நிகழ்வில் பிரதமரை அவதூறாக சித்தரித்துள்ளனர். அதைக் கண்டித்து பாஜகவினர் மேட்டுப்பாளையத்தில் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் பேசியது சர்ச்சைக்குள்ளானது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமரை விமர்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத்தாண்டியும் சிலபேரை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வன்முறை இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தில் கல்வீசி தாக்கியவர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக எப்போதும் மதம் சார்ந்த அரசியல் செய்வது இல்லை. கட்சியின் உறுப்பினர் அட்டையில் அதுதான் குறிப்பிடப்பட்டிருக்கும். பாஜக, எந்த ஒரு மத நம்பிக்கையும் அவமானப்படுத்தும் கட்சி அல்ல. நபிகள் நாயகம் குறித்து கல்யாண ராமன் பேசியது தொடர்பாக நீதிமன்றம் முடிவு செய்யும். திட்டமிட்டு தேர்தல் நேரத்தில் வன்முறையை உருவாக்கி, தேர்தலை சந்திக்க வேண்டும் என சிலர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் கொடைக்கானல், மேட்டுப்பாளைம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள்” என்றார்.
Be First to Comment