கோவை உக்கடம் அன்பு நகர் ரோஸ்மா கார்டன் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது .
மழை பெய்தால் அனைத்து குடியிருப்பு பகுதிக்குள் சாக்கடை கழிவு நீர்கள் புகுந்து விடுகிறது. பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் விரைவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறினர்.
கோவை மாநகரில் இன்று பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன் குடியிருப்புகளுக்குள்ளும் சாக்கடை கலந்த மழை நீர் புகுந்தது.
கோவையில் நேற்று மதிய நேரத்திலிருந்து திடீரென கனமழை பெய்ய தொடங்கியது.சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக கரும்புக்கடை 86வது வார்டில் உள்ள பாரத் நகர் 2வது வீதி,81வது வார்டு வெரைட்டி ஹால் சாலையிலுள்ள சி.எம்.சி காலனி போன்ற பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
அதேபோல கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மசால் லே-அவுட் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஊரையே தூய்மை செய்யும் இவர்களின் குடியிருப்பு சாக்கடையும் புழுவுமாக உள்ளது.
இவர்களின் குடியிருப்பில் பெரிய சாக்கடை கால்வாய்கள் செல்கின்றன. அவைகள் சரிவர தூர்வாரப்படாததால் அடைக்கப்பட்டு குப்பைகளும் கழிவுகளும் தேங்கிக் கொண்டே செல்கிறது. அதேபோல கால்வாய் சிலாப்கள் அங்கொன்றும் இங்கொன்றும் உடைந்து உள்ளதால் பலர் கால்வாய் வழிப்பாதையில் பயணித்து விழுந்து படுகாயமும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று பெய்த கன மழையால் சாக்கடை கால்வாயில் இருந்த சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
இதைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த மக்கள் மழை ஓரளவு நின்ற பின் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை தாங்களாக வெளியேற்றினர்.
கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை எங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை அரசுக்கும் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றும் தீர்வு கிடைக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆட்சி மாறியவுடன் காட்சி மாறும் என நினைத்தோம் என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் இனியாவது எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா எனவும் நம்பிக்கையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Be First to Comment