அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை போராட்டம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சில மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை அனைத்து முற்போக்கு இயக்கங்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திவிக, விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இத்திட்டம் இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பறித்து ராணுவத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் முயற்சி எனவும், பிரதமருக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, மோடி அரசு பொய் பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததாகவும், இந்த அக்னிபத் திட்டம், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆட்களை திரட்டும் திட்டம் எனவும் இதற்கு ராஜ்நாத் சிங்கும் உடந்தையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் உடனடியாக அந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Be First to Comment